Thursday 9 April 2015

பெண் ஒரு மாபெரும் சக்தி!



பெண்! தன்னை தேவைக்கு பயன் படுத்தும் இயந்திரம் போல் நடத்துவதாகச் சொல்வாள். எனினும் அவளே இயந்திரம் விழுங்கியவள் போல் உழைப்பாள். அன்பு பாசம் நேசம் நட்பு கோபம் என உணர்வுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தேர் அவள்.
கணவனின் தேவையா, மறவாது செய்வாள்.
பிள்ளைகளின் ஆசையா, விரும்பி செய்வாள்.
பெற்றோருக்கு அவசியமா, செய்யாமல் விட மாட்டாள்.
கணவனின் பெற்றோர் உற்றார் தேவையா, விட்டுக் கொடுக்க மாட்டாள்.
தன் சகோதர சகோதரிகள் அவரது பிள்ளைகள் நாடினவா, தவறுவாள் இல்லை.
அடுத்த வீட்டு ஆச்சிக்கோ அவரைச் சேர்ந்தவருக்கோ ஒரு தேவையா நான் இருக்கிறேன் என்பாள்.
கோடி வீட்டு மக்களானாலும் தனக்கு உதவி செய்யும் வேலையாட்கள் ஆனாலும் அவளை நம்பலாம்.
அவளைக் காண்போருக்கு அவள் ஒரு உதாரணம். புரிந்து கொள்வது கடினம் தான் ஆனால் புரிந்து கொண்ட பின் அவள் ஒரு பெட்டகம்.
அவள் ஒரு சக்தி,
துவண்ட செடியை துளிர்க்கச் செய்யும் நீர்,
வலுவிழந்த மாளிகைக்குத் தூண்,
அந்த சக்திக்கு உரம் அன்பு,
அன்பு, அன்பின் வெளிப்பாடு மட்டுமே.
அதுவும் உண்மை அன்பு,
முகஸ்துதியை முற்றிலும் மறுக்கும் அன்பு.
இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும்!
எனினும் இதை எழுதத் தூண்டிய பெண்!
என்னைப் பெற்ற என் அன்னை
.

Tuesday 7 April 2015

ஆசையே பக்தியாய்!

சின்ன சின்ன ஆசை சுமந்து
சிட்டாய்ப் பறந்த காலம் வேறு
ஆசை சற்றே முதிர்வு பெற
ஆழ்ந்து சிந்தையில் பதிந்து விடும்

வாழ்க்கையின் நோக்கமாய் மாறி விடும்
வாழ்ந்து காட்ட வெறி பிறக்கும்.
சிறகடித்து பறந்து வரும் ஆசைகளை
விரட்டாமல் சற்றே, நோக்கினால் என்ன?

இறை அன்பு கூட, பக்தியாய்
உருமாறி வந்திட்ட விருப்பம் அன்றோ!
மெருகடைந்த ஆவலே, பற்றாய் மாறி
திருவடியே சரண் ஆக வாழ்விக்கும்.