Tuesday 27 January 2015

குழல் ஓசை

காற்றில் மிதந்து கந்தம் வரும்,
கனவு வரும் காதல் கூட வரும் (என்று சொல்வார்).
வரும், வருவது தங்குமா?
வந்த வழியே விடைபெறக்கூடும்.

காந்தமாய் இழுக்கும் கண்ணன்
கானமாய்ப் பொழியும் அவன் குழல்,
எனையும் சற்றே  பற்றாதோ?
நினைவில் நின்றே ஆளாதோ?

உருகும் பக்தர் சங்கமே
குறுகும் வாழ்வில் வேண்டியது.
கிருஷ்ணர் கதை சொல்லும் அழகில்
உருவகித்து அமர்த்துவார், பாகவதாள் தானுமே!

கதையில் லயித்து கேட்போரும்
அதைச் சொல்லிதானும் மகிழ்வோரும்
உள்ளவரை, இப்பூவுலகில் பக்தி,
வெள்ளமாய்ப் பாய்ந்திடும், நம்புகிறேன்!

Saturday 24 January 2015

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் !



மனம் அமைதியாய் இருக்கும் போதே செய்ய நினைப்பது அனைத்தையும் யோசிக்காமல் செய்து விட வேண்டும். அன்றேல், இந்த மனம் எப்போது எங்கே தாவும் என்று சொல்ல முடியாது.

முன்பெல்லாம் என் கோபத்தை ஆத்திரத்தை வார்த்தைகளில் எழுதி திட்டித் தீர்க்கும் நிறைவைப் பெறுவேன். சொல்ல முடியாமல் திணறுவது போல் தோன்றும். அந்தப் போராட்டம் சொல்லபோனால் என் வாழ்க்கையில் இருந்தது என்பதை விட என் மனதில் மட்டுமே இருந்து வந்துள்ளது. அந்த நிலையில் அது ஒரு வடிகாலாக இருந்தது.

இருப்பினும் அது பழக்கம் ஆகிவிட்டது, உணர்வுகளைப் பதிவு செய்வது. எனவே நல்ல உணர்வுகளையும் பதிவு செய்யத் தொடங்கினேன். வடிகால் என்பதற்காக அல்ல. மனம் கொள்ளவில்லை. என் நினைவாற்றல் நினைவகம் போதவில்லை. சேமிக்க ஒரு பெட்டகம் வேண்டியே வார்த்தைகளால் மாலை கோர்த்து சேர்த்து வைக்கிறேன். என் கணவர் பற்றி மட்டுமல்ல, பிள்ளைகள், பெற்றோர், தமக்கை, நண்பர், தோழியர், தெய்வம் அனைவரைப் பற்றியும்.