தன்னைச் சுற்றி வளரும் காடு
தானே தோன்றும் செடி கொடி
தயவாய் நட்ட நெல் நாற்று
தவழும் இடையில் கயல் பல.
மணம் கவழும் சில பூக்கள்
மனம் இழுக்கும் மாட்டுச் சாணம்
மடை திறந்த கால்வாய்கள்
மணல் வரப்புக் கிடையலே
நீர் தேடியே காத தூரம்
நீண்ட நடை நடக்க வேண்டும்
நிறைத்துக் குடம் தலை மேலே
நிலைக்குமாறு வைக்க வேண்டும்
அசையா வண்ணம் அமர்த்திய வாறு
அலை மோதா நிறை குடத்தை
அடுப்பு மூட்டி உலை வைக்க
அடுக்களைக்குக் கொண்டு சேர்ப்பர்
உரம் பாய்ந்து வேர் ஊன்றிய
ஊர் காக்கும் தேவியர்
உறக்கம் விழித்த கணம் முதலே
உடன் தொடரும் வேலைகள்
தண்ணீர் மட்டுமா சுமந்தனர்
தட்டில் இட்ட வெளுக்கும் துணி
தரம் தரமாய் தேய்க்கப் பாத்திரம்
தன் பிள்ளையும் இடுக்கில் சிலநாள்.
இயந்திரம் அன்றி வேறெதுவும் எங்கே
இத்தனை வேலை செய்யக் கண்டோம்?
இங்கே வந்து கண்ணில் நிறைப்போம்
இத்தகு சக்தி அடங்கிய பெண்ணை!
மீனாள் மணிகண்டன்
No comments:
Post a Comment